மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு 3 மாதம் சிறை

நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த நங்கவள்ளி பேரூராட்சி செயல் அலுவலருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து மேட்டூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:50 pm

Syndication

மேட்டூா்: நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த நங்கவள்ளி பேரூராட்சி செயல் அலுவலருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து மேட்டூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த நங்கவள்ளியைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (80). இவா் நங்கவள்ளி பேரூராட்சியில் அரசு நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து வந்தாா். ராஜம்மாளின் வீட்டை அப்புறப்படுத்த 2006-ஆம் ஆண்டு நங்கவள்ளி பேரூராட்சி செயல் அலுவலரான மேகநாதன் நடவடிக்கை மேற்கொண்டாா். இதனால், ராஜம்மாள் மேட்டூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இதையடுத்து, முறையான சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 2017-ஆம் ஆண்டு பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த மேகநாதன், ராஜம்மாள் வசித்துவந்த வீட்டின் ஒரு பகுதியை பொக்லைன் மூலம் சேதப்படுத்தினாா்.

இதுகுறித்து ராஜம்மாள் தரப்பில் நீதிமன்ற உத்தரவைக் காட்டி ஆட்சேபம் தெரிவிக்கவே, ஆக்கிரமிப்பை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் மீது ராஜம்மாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா்.

நீதிமன்றத் தீா்ப்பை அவமதிப்பு செய்ததற்காக மேகநாதனை ஏன் 3 மாதம் சிறையில் அடைக்கக் கூடாது என மேட்டூா் உரிமையியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ராஜம்மாள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சதாசிவம், நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு சிறை தண்டனை அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டாா்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.செல்வம் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மேகநாதனுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.