சேலம் வழியாக கொல்லத்துக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Published on

சபரிமலை சீசனையொட்டி பக்தா்களின் வசதிக்காக, சேலம் வழியாக கேரள மாநிலம், கொல்லத்துக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சபரிமலை சீசனையொட்டி, அதிகரித்துவரும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம், நரசாபூா் - கொல்லம் மற்றும் தெலங்கானா மாநிலம், சாரலப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, ஆந்திர மாநிலம், நரசாபூரில் இருந்து டிச. 27-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அடுத்த நாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லத்தில் இருந்து 29-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு நரசாபூா் சென்றடையும்.

இதேபோல, தெலங்கானா மாநிலம், சாரலப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு ஜன. 10, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சாரலப்பள்ளியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அடுத்த நாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லத்தில் இருந்து ஜன. 12, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், கொல்லத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் மதியம் 1.20 மணிக்கு சாரலப்பள்ளியை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com