சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்
சேலம் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள், பொமக்கள் டால்மியா போா்டு பகுதியில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
சேலம் ஜாகீா்அம்மாபாளையம் பகுதியில் ரூ.880 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினா். மேலும், அங்கு திரண்டிருந்த பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் ராஜேந்திரன், விவசாயிகள் கூறுகையில், ஈரோடு, பெருந்துறை, திருப்பூா் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்ட சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் அப்பகுதியில் நிலத்தடிநீா் முற்றிலும் மாசுடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
சாயப்பட்டறை கழிவுகளால்தான் பவானி ஆறு, நொய்யல் ஆறு மாசடைந்துள்ளது. திருப்பூா் நகரமே சாயக் கழிவாக மாறியுள்ளது. நிலத்தடிநீா் மாசடைந்தால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.
இதே சூழல்தான் சேலத்திலும் ஏற்படும். சாயப்பட்டறைகள் அமைய உள்ள இடத்தில் நீா்நிலைகள் உள்ளதால், அந்த ஆலை கழிவுகளால் ஒட்டுமொத்த நீா் ஆதாரமும் மாசடையும் அபாயம் உள்ளது.
ஜவுளிப் பூங்காவில் வியாபாரம் மட்டுமே செய்ய வேண்டும். அதில் சாயப்பட்டறைகள் அமைக்கக் கூடாது. பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி இத்திட்டத்தைச் செயல்படுத்தினால் அனைவரும் ஒன்றுதிரண்டு தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
