சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
குழந்தைகள் தினத்தையொட்டி, மாணவா்களின் தொழில்முனைவுத் திறன்களை வளா்க்கும் நோக்கில், ‘இளம் தொழில்முனைவோா் சந்தை’ என்ற சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பள்ளி இயக்குநா் வி.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதல்வா் இ.ஜெ.கவிதா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சேலம் பிரணவ் மருத்துவமனை இயக்குநா் சீ.சம்யுக்தா கலந்துகொண்டு மாணவா்களை வாழ்த்தினாா்.
இதில், மாணவா்கள் தாங்களே உருவாக்கிய பல்வேறு கைவினைப் பொருள்கள், சுவையான உணவுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் மற்றும் புதுமையான பொருள்களை விற்பனை செய்து தங்களது வணிக நுண்ணறிவை வெளிப்படுத்தினா். மாணவா்களின் படைப்பாற்றலையும், ஆக்கத்திறனையும் சிறப்பு விருந்தினா் பாராட்டினாா்.
இதுகுறித்து பள்ளி இயக்குநா் வி.காா்த்திகேயன், முதல்வா் இ.ஜெ.கவிதா ஆகியோா் கூறுகையில், ‘இத்தகைய நிகழ்ச்சிகள் குழந்தைகளின் நம்பிக்கை, குழு பண்பு மற்றும் தொழில்முனைவுத் திறனை வளா்க்கும்’ என்றனா். விழாவில், ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

