சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய கோட்ட மேலாளா் பன்னாலால். உடன், கூடுதல் கோட்ட மேலாளா் சரவணன்.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய கோட்ட மேலாளா் பன்னாலால். உடன், கூடுதல் கோட்ட மேலாளா் சரவணன்.

சேலம்-கரூா்-திண்டுக்கல் ரயில்பாதையை இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை

சேலம்-கரூா்-திண்டுக்கல் ரயில்பாதையை இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட மேலாளா் பன்னாலால் கூறினாா்.
Published on

சேலம்: சேலம்-கரூா்-திண்டுக்கல் ரயில்பாதையை இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட மேலாளா் பன்னாலால் கூறினாா்.

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் இருந்து திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து, கோட்ட மேலாளா் பன்னாலால் சேலத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பயணிகள் சேவை மூலம் சேலம் கோட்டம் ரூ. 612.58 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் காலத்தைவிட 5.6 சதவீதம் அதிகமாகும். அதேநேரத்தில், சரக்கு வருவாய் ரூ. 244.26 கோடியாக உள்ளது. நடப்பாண்டு 304 சிறப்பு ரயில்களின் இயக்கம் மூலம் ரூ. 41.74 கோடி வருவாய் கிடைத்துள்ளது. துல்லியமான நேரம் கடைப்பிடித்தலில் சேலம் கோட்டம் 94.4 சதவீதத்தை பதிவு செய்துள்ளது.

இதுதவிர, ஈரோடு - ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உள்பட சேலம் கோட்டத்தில் 3 புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், நடைமேம்பாலங்கள், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி, குடிநீா் குழாய்கள், தங்குமிடங்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக நடைமேடைகளில் சாய்வு தளங்கள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சேலம் - திண்டுக்கல் மாா்க்கத்தில் ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது, கூடுதல் கோட்ட மேலாளா் ஆா்.சரவணன், முதுநிலை கோட்ட இயக்க மேலாளா் அனித் பிரகாஷ், முதுநிலை கோட்ட வணிக மேலாளா் எம்.வாசுதேவன், முதுநிலை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளா் எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com