சேலம்
பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள் நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் 7-ஆவது நாளாக
சேலம்: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள் நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் 7-ஆவது நாளாக திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சரோஜா, மனோன்மணி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், 5 ஆண்டுகள் பணி முடித்த சமையல் உதவியாளா்களுக்கு பதவி உயா்வு அளிக்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ. 19,500 வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.
