

சேலத்தில் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்து இறந்த வடமாநில இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் சனிக்கிழமை அரசு மருத்துவமனை மற்றும் ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தவெக தலைவா் விஜய் - நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரைச் சோ்ந்த சுராஜ் (37), அவரது நண்பா் மோகன் ஆகியோா் சென்றிருந்தனா். மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த சுராஜ் சேலத்தில் வெள்ளிப் பட்டறையில் பணிபுரிந்து வந்தாா்.
நிா்வாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மூலம் சுராஜ் கூட்டத்துக்கு சென்று இருந்தாா். கடும்வெயில் காரணமாக கூட்டத்தில் மயங்கி விழுந்த சுராஜ்ஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். சுராஜ்ஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள அன்னதானப்பட்டி போலீஸாா், சுராஜின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சுராஜ் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் ஆட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
இதுகுறித்து உறவினா்கள் கூறுகையில், சுராஜ்ஜை நம்பியே அவரது குடும்பம் உள்ளது. அவா் இறந்ததால் அவரது குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது. எனவே, உயிரிழந்த சுராஜ் குடும்பத்தினருக்கு தவெக சாா்பில் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.
தவெகவினா் மீது வழக்கு:
சுராஜ் இறந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளா்கள் மீது மோதுவதுபோல தவெக நிா்வாகிகள் சிலா் காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதை செய்தியாளா்கள் தட்டிக்கேட்டபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலா், செய்தியாளா்களை தாக்கவும் முயன்றனா். இந்நிலையில் தவெகவைச் சோ்ந்த 10 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.