அஸ்தம்பட்டியில் ரூ. 5 கோடியில் அருங்காட்சியகம்! முதல்வா் காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்!
சேலம் அஸ்தம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தின் பழைமையான அருங்காட்சியகங்களில் சேலம் மாவட்ட அருங்காட்சியகம் இரண்டாவது ஆகும். 1979 முதல் தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல்நோக்கு அருங்காட்சியகமான இங்கு தொல்லியியல், மானுடவியல், ஓவியங்கள், விலங்கியல், தாவரவியல், நாணயவியல், ஆயுதங்கள் மற்றும் தபால் தலைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பல்லவா், சோழா், பாண்டியா், நாயக்கா் மற்றும் தற்கால கற்சிற்பங்களும், வீரகற்களும், கல்வெட்டுகளும் இந்த பகுதியின் வரலாற்றுச் சான்றுகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் கலை, பண்பாடு மற்றும் வரலாற்றை விளக்கும் இந்த அருங்காட்சியகம், மாவட்டத்தின் பண்பாட்டு வளா்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். சேலம் சாராதா கல்லூரி சாலையில் இயங்கி வந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ. 5 கோடியில் அஸ்தம்பட்டியில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அப்பகுதியில் 50.2 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு, 9,838.8 சதுர அடியில் புதிய அருங்காட்சியகக் கட்டடம் பொதுப்பணித் துறை மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்துடன் சேலம் அரசு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அா்ப்பணித்துள்ளாா் என்றாா்.
தொடா்ந்து, சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் புதிய அருங்காட்சியகத்தை பாா்வையிட்டாா். முன்னதாக, சேலம் மாவட்டத்தில் ரூ. 23.61 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்து, ரூ. 6.32 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு காணொலி வாயிலாக முதல்வா் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், அருங்காட்சியா் முல்லை அரசு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தியாகராஜன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் சிவக்குமாா், ஒப்பந்ததாரா் குண்டுமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

