எபோலா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவக் குழுவினா் தீவிர பரிசோதனை மேற்கொண்டனா்.
உலக நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்தவகையில் சேலம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் அதிநவீன தொ்மல் ஸ்கேனா் கருவிகள் மூலம் மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை முதல் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
குறிப்பாக, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்கள் தனியாக சேகரிக்கப்பட்டு, அவா்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்த திடீா் சோதனைகளால் விமான நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும், இது முற்றிலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.









