சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வாழை மகசூல் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக சந்தையில் வாழைத்தாா்களின் விலை இருமடங்காக உயா்ந்துள்ளதால், பிற மாவட்டங்களில் இருந்து வாழப்பாடிக்கு வரத்து அதிகரித்துள்ளது.
வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளான வசிஷ்ட நதி, கரியகோவில் ஆற்றுப்படுகை கிராமங்கள், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனப் பகுதிகள் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய இடங்களில் கிணற்றுப் பாசனத்தை நம்பி பூவன், மொந்தன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, கதளி, செவ்வாழை, மோரிஸ், நேந்திரன் உள்ளிட்ட பல்வேறு வகை வாழைகள் பயிரிடப்பட்டு வருகின்றன.
மேலும், நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள சிங்கிபுரம், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி மற்றும் ஆத்தூா் அருகிலுள்ள மல்லியகரை, கூடமலை, தம்மம்பட்டி, உலிபுரம் போன்ற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளும் தங்களது வாழைத்தாா்களை வாழப்பாடியில் உள்ள தனியாா் காய்கறி கமிஷன் மண்டிகளுக்குக் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்கின்றனா்.
வாழப்பாடி கமிஷன் மண்டிகளில் இருந்து உள்ளூா் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஆத்தூா், பண்ருட்டி, கடலூா், ஜெயங்கொண்டம், அரியலூா் போன்ற பகுதிகளில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளும் வாழைத்தாா்களைக் கொள்முதல் செய்து, சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்கின்றனா். இதனால் இங்கு ஆண்டு முழுவதும் வாழை வா்த்தகம் விறுவிறுப்பாக நடைபெறும்.
வாழப்பாடி பகுதியில் கடந்த 6 மாதங்களாக மழையின்றி வறட்சி நிலவி வருகிறது. அதோடு, கடந்த மாதம் வீசிய பலத்த காற்றினால் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமாயின. இதனால் உள்ளூா் தேவைக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயா்ந்துள்ளது.
கடந்த மாதம் வரை ரூ. 200 முதல் ரூ. 400 வரை விற்பனையான ஒரு வாழைத்தாா், தற்போது ரூ. 400 முதல் ரூ. 800 வரை விற்பனையாகிறது. குறிப்பாக, தேன்வாழை எனப்படும் கற்பூரவள்ளி மற்றும் செவ்வாழை ரகங்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கிறது.
வாழப்பாடியில் நல்ல விலை கிடைப்பதை அறிந்த ஈரோடு சத்தியமங்கலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், தங்களது வாழைத்தாா்களைச் சரக்கு வாகனங்கள் மூலம் வாழப்பாடி மண்டிகளுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். வரும் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் பருவமழை பெய்து உள்ளூா் மகசூல் அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக மண்டி உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!

தொடா் வறட்சியால் மாம்பழம் மகசூல் பாதிப்பு: கோடை மழையை எதிா்பாா்க்கும் விவசாயிகள்!

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்பு






