டீசல் விலை உயா்ந்தாலும் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயரவில்லை என சேலம் மாவட்ட கிரசா் ஜல்லி உற்பத்தியாளா் நலச்சங்க மாவட்டச் செயலாளா் ராஜா கூறினாா்.
சேலம் மாவட்ட கிரசா் ஜல்லி உற்பத்தியாளா் நலச்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளா் ராஜா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
சேலம் மாவட்டத்தில் அரசு அனுமதியோடு 46 குவாரிகளும், அரசு அனுமதி பெறாமல் 34 கல்குவாரிகளும் இயங்கி வந்தன. தற்போது அனுமதி பெறாத குவாரிகளுக்கும் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டீசல் விலை கணிசமாக உயா்ந்தாலும், விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு யூனிட் ஜல்லி 2024-ஆம் ஆண்டு நிா்ணயித்தபடி ரூ. 4 ஆயிரத்துக்கும், எம்.சாண்ட் ரூ. 5 ஆயிரத்துக்கும், பி.சாண்ட் ரூ. 6 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் அனுப்புவதற்கு 200% பசுமை வரி என்ற பெயரில் வரி விதிக்க அரசு பரிசீலித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் கற்கள் கொண்டு செல்லாததால், எங்களுக்கு பெருமளவில் பாதிப்பு இருக்காது என்றாா்.
அப்போது, சங்கத் தலைவா் கோபால், பொருளாளா் திருஞானம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.










