சாதிச் சான்றிதழுக்காகப் போராடும் காட்டுநாயக்கர் சமூகத்தினர்!

ராமநாதபுரம்,ஜன 31:  ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமூகத்தினர் சாதிச் சான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாக போராடிவருகின்றனர். சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் இவர்களது குழந்
Updated on
1 min read

ராமநாதபுரம்,ஜன 31:  ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமூகத்தினர் சாதிச் சான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாக போராடிவருகின்றனர். சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் இவர்களது குழந்தைகள் அரசின் சலுகைகளைப் பெற முடியாமலும், உயர்கல்வியையும் தொடரமுடியாமல் தவிக்கின்றனர்.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிப்பட்டினம் வடக்குத் தெரு, திருப்புல்லாணியில் இந்திரா நகர், ராமேசுவரத்தில் ஜெ.ஜெ.நகர், பரமக்குடியில் லீலாவதி நகர்,திருவாடானையில் பண்ணைவயல், தொண்டி, நம்புதாளை, மீமிசல், தீர்த்தாண்டதானம், ராமநாதபுரம் நகரில் அண்ணாநகர்,கே.கே.நகர், மஞ்சன மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

 ஆரம்ப காலத்தில் கொக்கு, குருவிகளைப் பிடித்து பிழைப்பு நடத்திவந்த இச்சமூகத்தினர், தற்போது அவற்றைப் பிடிப்பதற்கு அரசு தடை விதித்ததையடுத்து கூலிவேலைகளுக்கு மாறியுள்ளனர்.   இவர்களுக்கென காட்டுநாயக்கர் சமுதாய முன்னேற்ற சங்கம் என்கிற அமைப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்படி ஒரு சாதியே ராமநாதபுரம் மாவட்டத்தில் இல்லை என்று அரசு மறுக்கிறது. இதனால் இச்சமூகத்தினருக்கு சாதிச் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

 இதன்காரணமாக இச்சமுதாயத்தை சேர்ந்த மக்களின் குழந்தைகளுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை.

 இதனால் இச்சமூகத்தினரின் குழந்தைகள் 10-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு கூலிவேலைக்குச் செல்லுகின்றனர்.   இதுகுறித்து ராமநாதபுரத்தில் வசிக்கும் இச்சமூகத்தைச் சேர்ந்த பழனி, முருகேசன் ஆகியோர் கூறியதாவது:

 சாதிச் சான்றிதழ் கேட்டு 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறோம். ராமேசுவரத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்,முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகியோரிடமும் மனுக் கொடுத்திருக்கிறோம். எங்களது சமூகத்தினரின் சங்கத்தையும் முறையாக பதிவு செய்திருக்கிறோம்.

 எங்களது பூர்வீகம் காட்டுநாயக்கர் சாதிதான். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சாதியே இல்லை என்று சான்றிதழ் தர அரசு மறுக்கிறது.

  ராமநாதபுரம் ஞானதீபா சேவா சங்கம் அண்ணா நகரில் விவேகானந்தா இலவசக் கல்வி மையம் ஒன்றை ஏற்படுத்தி கடந்த 8 ஆண்டுகளாக இலவசமாக எங்கள் குழந்தைகளுக்கு பாடங்களை கற்றுத்தருகிறது. இதனால் எங்களது குழந்தைகள் 10-ம் வகுப்பு வரை படிக்கமுடிகிறது.

 ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் அரசின் சலுகைகளோடு உயர்கல்வி பயில முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்களும் எங்களைப் போலவே கூலித் தொழிலாளிகளாக மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றனர் அவர்கள்.

  இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டுநாயக்கர் என்று ஒரு சாதியே இல்லை என அரசுக்கு ஏற்கெனவே அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும்போது இந்த சாதிக்கு எப்படி சான்றிதழ் தரமுடியும். காட்டுநாயக்கர் என்பதற்கு பதிலாக நாயக்கர் என்றும் தரலாம்.  காட்டுநாயக்கர் என்பது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தது. நாயக்கர் என்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தது என்பதால் அதைப்பெற அவர்கள் தயாராக இல்லை என்றார் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com