விருதுநகர், ஜன. 1: விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மாணவ, மாணவியர் விடுதிகள் 46 உள்ளன. இங்கு கிராமங்களைச் சேர்ந்த கல்லூரி, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர்.
இங்குள்ள விடுதிகளில் மொத்தம் 86 சமையலர்கள், 46 காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் விருதுநகர், அருப்புக்கோட்டை, நரிக்குடி, உலக்குடி, முஷ்டக்குறிச்சி, எம்.புதுப்பட்டி, காரியாபட்டி, முத்துராமலிங்காபுரம் ஆகிய இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட விடுதிகளில் போதுமான பணியாளர்கள் இல்லை. தற்போது காலியாகவுள்ள காவலர்கள்-9, சமையலர்கள்-33, விடுதிக்காப்பாளர்கள்-20 உள்பட 62 பணியிடங்களுக்கு மேல் காலியாக உள்ளன.
அரசு விதிமுறைப்படி 50 மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதிக்கு ஒரு காப்பாளர், 2 சமையலர், ஒரு காவலர் இருக்க வேண்டும். இந்த விடுதிகளில் பணியாளர்கள் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்க முடியாத நிலை உள்ளது.
மாணவர்களின் கல்வித் தரம், வருகைப் பதிவேடு, நடத்தை ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மதிப்பெண் பட்டியல்களை மேற்பார்வையிட்டு மேலொப்பம் இட முடியாத சூழ்நிலை இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கல்வி விடுதிப் பணியாளர் நலச் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் சி.ராமமூர்த்தி கூறுகையில், மொத்தப் பணியிடங்களில் பாதிக்கு மேல் காலியாக உள்ளன. ஒருவரே 3 முதல் 4 விடுதிகளை கூடுதல் பொறுப்புகளாக நிர்வகித்து வருகின்றனர். போதிய பணியாளர்கள் இல்லாததால் விடுதிக்குள் உள்ளூர் இளைஞர்கள் அனுமதியின்றி வந்து பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள் எனத் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் கூறுகையில், இத்துறையில் உள்ள காலியிட விவரங்கள் இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.