மரத்தடியே வகுப்பறை; ஆனால் 100 சதவீதம் தேர்ச்சி
சிவகங்கை, ஜன. 10: புளிய மரத்தடியில் மாணவர்கள் படிக்கின்றனர். கருமந்தக்குடி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். உயர்நிலைப் பள்ளியாக இப்பள்ளியைத் தரம் உயர்த்திய அரசு, போதிய கட்டடங்களை அமைத்துத் தர நடவடிக்


சிவகங்கை, ஜன. 10: புளிய மரத்தடியில் மாணவர்கள் படிக்கின்றனர். கருமந்தக்குடி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். உயர்நிலைப் பள்ளியாக இப்பள்ளியைத் தரம் உயர்த்திய அரசு, போதிய கட்டடங்களை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், அதப்படக்கி ஊராட்சியைச் சேர்ந்தது கருமந்தக்குடி. இக்கிராமத்தில் 1929-ல் தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டில் இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சுற்றிலும் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு படிக்கின்றனர்.
தொடக்கப் பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில் தற்போது செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளியில் 79 பேரும், உயர்நிலைப் பள்ளியில் 248 பேரும் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் உள்ள 4 கட்டடங்களில் ஒன்று பழுதடைந்து பயன்படுத்த
முடியாத நிலையில் உள்ளது. மேல் தளத்திலிருந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் ஆபத்துக் கருதி இந்த கட்டடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 3 கட்டடங்களில் ஒன்றில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இட நெருக்கடியில் படித்து வருகின்றனர். மற்ற 2 கட்டடங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர்.
இதில் தலைமை ஆசிரியர் அறை போக மீதமுள்ள சிறிய இடத்தில் 5 வகுப்புகளை வைத்து நடத்த முடியாததால் பல வகுப்புகள் பள்ளி வளாகத்துக்குள் உள்ள மரங்களின் அடியிலும், வளாகத்துக்கு வெளியே உள்ள புளிய மரத்துக்கு அடியிலும் நடைபெறுகின்றன.
கடந்த ஆண்டு இந்தப் பள்ளி பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது, நபார்டு திட்டம் மூலம் உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்ட ரூ. 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிக்கான டெண்டர் 2-3 முறை விடப்பட்டது. ஆனால், டெண்டர் எடுக்க யாரும் முன்வராமல் கட்டுமானப் பணி நடைபெறவில்லை என்று கூறினார் பள்ளி கல்விக்குழு துணைத் தலைவர் சுப்பிரமணியம்.
அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் கட்டடம் கட்டப் பெறவில்லையா எனக் கேட்டதற்கு, அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் ரூ. 22 லட்சத்து 5 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் கல்விக்குழுத் தலைவராக இருந்த ஊராட்சித் தலைவர் காலமாகிவிட்டார். எனவே துணைத் தலைவராக இருந்த நான், தலைமை ஆசிரியர் மற்றும் பொறியாளர்களுடன் சேர்ந்து கட்டடத்தைக் கட்டித்தருவதாக அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலரிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
இந்த நிலையில் மீண்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் தலைவரின் மனைவி அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நானே கல்விக்குழுத் தலைவராக இருந்து கட்டடத்தைக் கட்டுவேன் என அவர் தெரிவித்தார்.
பின்னர் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை ரத்து செய்துவிட்டனர் என்றார்.
உயர்நிலைப் பள்ளிக்காகவே 5 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது. இங்கு பள்ளிக் கட்டடம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ. ஒன்றரை லட்சம் செலவில் விளையாட்டு மைதானத்தை அமைத்து அதில் கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், உடற்பயிற்சிக்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதிக்கு 2 மினி பஸ்கள் உள்ளன. ஒரே ஒரு பஸ்தான் தற்போது இயங்குகிறது. இந்த பஸ்ஸில் 100 பேர் பயணம் செய்கின்றனர்.
பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம் இல்லை. வகுப்பிலோ, மரத்தடியிலோ உபகரணங்களைக் கொண்டுவந்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
இங்கு உள்ள கழிப்பறைகளில் ஒரு கழிப்பறையின் கதவு உடைந்துள்ளதால் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆனால், குடிநீருக்காக பள்ளிக்கென தனியாக 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
சாரண, சாரணியர் இயக்கம், மனித உரிமைக் கழகம், ரெட் ரிப்பன், இளஞ்செஞ்சிலுவைச் சங்கம், பசுமைப் படை ஆகியவை இப்பள்ளியில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், போதிய பள்ளிக் கட்டடம் இல்லாததால் கல்வியே பாதிக்கப்படும்போது இவற்றால் என்ன பயன் என்கின்றனர் பெற்றோர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...