பழனி, ஜூன் 27:÷பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் வட்டமலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சேதமடைந்த சாலை 7 மாதங்களாக சீரமைப்படாததால் சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
÷கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு மற்றும் பழனி வழியாக சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். வத்தலக்குண்டு சாலையைக் காட்டிலும் பழனி மலைப் பாதையில் உள்ள ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளும், பசுமைப்பள்ளத்தாக்கும், பழனி நகர் மற்றும் பல்வேறு அணைகளின் காட்சியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருவதால், பழனி வழியாகச் செல்வதை சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.
÷இந்நிலையில், பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் பழனியில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள சவரிக்காடு அருகிலுள்ள வட்டமலைப் பகுதியில் நான்காவது கொண்டை ஊசி வளைவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
÷இதனால் பழனி-கொடைக்கானல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் சுமார் 60 கி.மீ. சுற்றி கொடைக்கானல் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்போதைய திண்டுக்கல் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஜெயராஜ் தலைமையில் பழனி நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் முத்துக்குமரன், உதவிப் பொறியாளர் ரேணுகாதேவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று 50-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்களைக் கொண்டு இரவு, பகலாக சாலையை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
÷25 மீட்டர் நீளத்தில் 10 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் கொண்டு அடுக்கி சீரமைத்த நிலையில், மழை பெய்ததால் மீண்டும் சாலை சேதமடைந்தது.
÷இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் அப்போதைய மாவட்ட ஆட்சியர் வள்ளலாரின் முயற்சியால் சிறப்பு நிதி பெற்று மீண்டும் பணிகளை மேற்கொண்டனர். சாலை அகலப்படுத்தும் விதமாக பள்ளத்தில் ஆழமாக கட்டுக்கல் பதிக்கப்பட்டு கல் வரிசைகள் மேலே கொண்டு வரப்பட்டது.
÷மேலும் கொண்டை ஊசி வளைவு அருகிலேயே உள்ளதால் மறுபகுதியில் பாறைகள் வெடிவைத்து அகலப்படுத்தப்பட்டது. பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் கொடைக்கானலில் சீசன் ஆரம்பித்ததால் தற்காலிகமாக மண் கொட்டப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
÷பஸ் செல்ல ஆரம்பித்த நிலையில், கடந்த 4 மாதங்களாக சாலை சீரமைப்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாதி பணிகள் நிறைவடைந்த நிலையில், அங்கிருந்த தளவாடங்கள் அனைத்தும் ஒப்பந்ததாரர் தரப்பினர் கொண்டு சென்றுவிட்டனர். சாலையோரத்தில் குவிக்கப்ட்ட கற்கள் அகற்றப்படாததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.
÷பழனி நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் ரேணுகாதேவி கூறுகையில், ஒப்பந்ததாரரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நிலையில் சில பிரச்னைகளால் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. சில நாள்களில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நிறைவு பெறும் என தெரிவித்தார்.