நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொலிவு பெறும் தேசிய உயிரியல் பூங்கா

மனித மனத்துக்கு அமைதி தரக்கூடிய விஷயங்கள் பல. இயற்கையின் தோழர்களாகப் போற்றப்படும் விலங்குகளையும் பறவைகளையும் காணும்போது நம்மையும் அறியாமலேயே ஓர் ஆனந்த அமைதி மனத்தில் ஏற்படுவது இயல்பு. அதிலும் அரிதான,

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 7:10 am

வே.சுந்தரேஸ்வரன்

மனித மனத்துக்கு அமைதி தரக்கூடிய விஷயங்கள் பல. இயற்கையின் தோழர்களாகப் போற்றப்படும் விலங்குகளையும் பறவைகளையும் காணும்போது நம்மையும் அறியாமலேயே ஓர் ஆனந்த அமைதி மனத்தில் ஏற்படுவது இயல்பு.

அதிலும் அரிதான, ஆக்ரோஷமான விலங்கு, பறவை இனங்களைப் பார்ப்பதே அலாதியானது. இது போன்ற உயினங்களை வனத்துக்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லை. இயற்கை பிணைந்த வனச்சூழலுடன் அமையப் பெறும் உயிரியல் பூங்காக்காக்கள் அக்குறையைப் போக்குகின்றன.

வன அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் தில்லியின் புராண

கிலா பகுதி தேசிய உயிரியல் பூங்கா விலங்குகள், பறவைகளின் புகலிடமாக விளங்குகிறது.

ரூ. 176 கோடி திட்டம்



"சிங்கம்தான், இனிமே சிங்கிளா இருக்கக் கூடாது...'

சுமார் 280 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட, 50 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பூங்காவைப் புதுப்பொலிவு பெறச் செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

20 ஆண்டுக் காலத் திட்டத்தில் ரூ. 176 கோடி மதிப்பீட்டிலான "மாஸ்டர் பிளான்' மூலம் இத்தகைய பணிகள் நடைபெற்று வருகின்றன.

விலங்குகளும், பறவைகளும் பராமரிக்கப்படும் இடங்கள், பார்வையாளர் கூடம், பூங்காச் சாலைகள், தண்ணீர் வசதி, வடிகால் வசதி, பாலம் என பல பணிகள் சப்தமின்றி நடைபெற்று வருகின்றன.

சுமார் 1,500 வன உயிரினங்கள் உள்ள இந்தப் பூங்காவில் விலங்குப் பிரிவு, கால்நடைப் பிரிவு, கல்விப் பிரிவு, பாதுகாப்பு பிரிவு, சுகாதாரப் பிரிவு, தோட்டக்கலைப் பிரிவு என 10 பிரிவுகள் செயல்படுகின்றன.

ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, தரத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாஸ்டர் பிளானைத் தயாரிக்கும் நடைமுறைகளை முடிப்பதற்கு மட்டும் ஓராண்டு ஆகியது.

முன்னதாக, மத்திய வனவிலங்கு பூங்காக்கள் ஆணையத்துக்கு இத்திட்டத்துக்கான முன்மொழிவு அனுப்பப்பட்டு, ஆணையத்தின் வடிவமைப்புக் குழு வல்லுநர்கள் கள ஆய்வு செய்தனர்.

2011-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி இந்த மாஸ்டர் பிளான் திட்டத்தை மத்திய வனவிலங்கு ஆணையம் அங்கீகரித்தது.

"இந்த மாஸ்டர் பிளான்படி,நவீனத் தரத்துடன் கேலரி, செயல்பாட்டு மையம், கலையரங்கம் கொண்ட புதிய பார்வையாளர் மையம் அமைக்கப்பட உள்ளது.

உணவு வளாகம், நூல்கள் அடங்கிய பிரிவு, ஏ.டி.எம். மையம், பொதுமக்களுக்கான கழிப்பிடம், குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம், புல்வெளி, டிக்கெட் வழங்குமிடம், பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை, பார்வையாளர்களின் பொருள்களுக்கான பாதுகாப்பு அறை ஆகியவை அமைக்கப்பட உள்ளன' என்று தேசிய உயிரியல் பூங்காவின் இயக்குநர் அமிதாப் அக்னி ஹோத்ரி தெரிவித்தார்.



உலா வரும் வெள்ளைப்புலி



இது குறித்து "தினமணி' நிருபரிடம் அவர் மேலும் கூறியது:

தற்போது பூங்காவில் 105 வகையில் 1,500 விலங்குகளும், பறவைகளும் உள்ளன. மாஸ்டர் பிளான்படி இங்கு 200 வகையான விலங்கு, பறவை இனங்கள் இருக்கும். மொத்தம் இரண்டாயிரம் உயிரினங்கள் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.



"வாங்க! வாங்க' என வரவேற்கிறதோ நாரை!



ஏற்கெனவே விலங்குகளும், பறவைகளும் இருக்கும் 39 இடங்களின் வசதி, தரம் மேம்படுத்தப்படும். தற்போது பறவைகள், வெள்ளைப்புலிகள் பராமரிக்கப்படும் இடங்களின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளன.

விலங்குகளை பார்வையாளர்கள் எளிதாகப் பார்க்கும் வகையில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. பலவிதமான பூச்சிகள், மீன்கள், வண்ணத்துப் பூச்சிகளுக்கான பூங்காவும், மழைக்காடும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. மழைக்காலத்தின்போது பூங்காவில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக, 70 சதவீதம் வரை இப்பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. முழுமையாகத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

"மாதிரி பூங்கா'

மாஸ்டர் பிளானுக்கான மொத்த மதிப்பீடான ரூ. 176 கோடியில், வனத் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பூங்காவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பூங்காவை, தேசிய அளவில் "மாதிரி உயிரியல் பூங்கா'வாக ஆக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.



"எங்களையும் கவனிப்பாங்க போல...'

அதற்காகவே, சர்வதேசத் தரத்தில் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை ஒருங்கிணைப்பு, தண்ணீர் சப்ளை, மேற்பரப்பு கழிவுநீர்ப்போக்கு, மின் விநியோகம், பார்வையாளர்களுக்குக் கழிப்பிட வசதி, பால் பொருள் விற்பனையகம், உணவகங்கள், தங்குமிடம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் இந்த மாஸ்டர் பிளானின் உள்ளடக்கம் என்று அமிதாப் அக்னி ஹோத்ரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.