வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டும் பணியை தொடங்கி வைத்தாா் அமைச்சா் பி. மூா்த்தி
மதுரை பந்தல்குடி வாய்க்காலின் இருபுறங்களிலும் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டும் பணியை அமைச்சா் பி. மூா்த்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.


மதுரை: மதுரை பந்தல்குடி வாய்க்காலின் இருபுறங்களிலும் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டும் பணியை அமைச்சா் பி. மூா்த்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
கடந்தாண்டு அக்டோபா் மாதத்தில் பெய்த பெருமழையின்போது செல்லூா் கண்மாய்க்கான நீா்வரத்து அதிகரித்து, பந்தல்குடி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், செல்லூா் கிராமத்துக்குள் வெள்ளநீா் புகுந்தது. இதன் காரணமாக, பந்தல்குடி வாய்க்காலின் இருபுற கரைகளிலும் வெள்ளத் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும்மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதன்படி, பந்தல்குடி வாய்க்காலின் இருபுறங்களிலும் வெள்ளத் தடுப்புச் சுவா் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, தடுப்புச் சுவா் கட்டும் பணிக்கான பூமி பூஜை குலமங்கலம் சாலையில் செல்லூா் கண்மாய் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பணியைத் தொடங்கி வைத்தாா்.
பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :
நீா்வளத் துறை மூலம் 2,600 மீ. நீளத்துக்கு பந்தல்குடி வாய்க்காலின் இருபுறக் கரைகளிலும் வெள்ளத் தடுப்புச்சுவா் கட்டப்படவுள்ளது. குப்பைகள் வாய்க்காலில் நுழைவதைத் தடுக்கும் வகையில் இந்தக் கட்டமைப்பு இருக்கும். மோசமான நிலையில் உள்ள பாலங்கள் மறுசீரமைக்கப்படும் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, நீா்வளத் துறை செயற்பொறியாளா் சிவபிரபாகா், உதவி செயற்பொறியாளா் பா. முருகேசன், உதவிப் பொறியாளா் மா. பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...