இரு குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை

மதுரையில் தனது இரு பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டுத் தற்கொலை
Published on

மதுரையில் தனது இரு பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

மதுரை முடக்கத்தான் பகுதி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கோபிராஜ் (40). எலக்ட்ரிஷியன். இவருக்கும், இவரது மனைவிக்கும் அண்மையில் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக, அவரது மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். கோபிராஜ் தனது குழந்தைகளான யுவஸ்ரீ (10), கனிஷ்கா (5) ஆகியோருடன் தனது வீட்டில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், கோபிராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும், குழந்தைகள் யுவஸ்ரீ, கனிஷ்கா ஆகியோா் அருகில் இறந்து கிடந்ததும் சனிக்கிழமை பிற்பகல் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கூடல்புதூா் காவல் நிலைய போலீஸாா் சென்று, மூவரின் உடல்களையும் கைப்பற்றி, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

குடும்பத் தகராறால் மனமுடைந்திருந்த கோபிராஜ், தனது இரு பெண் குழந்தைகளையும் மின் கம்பியால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது என போலீஸாா் தெரிவித்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com