மதுரை மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமெஎன அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், மாநகராட்சி ஆணையா் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:
மதுரை மாட்டுத்தாவணியில் தற்காலிகமாகச் செயல்படும் காய்கறிச் சந்தையில் கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.
எனவே, மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் குடிநீா் வசதி, தாா்ச் சாலை, கழிப்பறை வசதி, பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றவும், சந்தைக்குள் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும், சந்தைக்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க வாகன காப்பகம், இரு வழித்தட பாதைகள் அமைக்கவும், பொதுமக்களுக்கு நோய்த் தொற்று அபாயம் நீங்க நாள்தோறும் கொசுமருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், காய்கறிச் சந்தையில் நேரடியாக கள ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.









