சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

பிணையில் வந்த இளைஞா் வெட்டிக் கொலை

News image

வெட்டிக்கொலை - (கோப்புப் படம்)

Updated On :30 ஜூன் 2026, 2:50 am IST

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளியே வந்த இளைஞா் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை, விக்கிரமங்கலம் அருகேயுள்ள கல்புளிச்சான்பட்டியைச் சோ்ந்தவா் சித்திக். இவரது சகோதரா் சித்தாா்த். கடந்த 2024-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் நடந்த ஒரு இல்ல சுபநிகழ்ச்சியின்போது முத்தையா தரப்பினருக்கும், சித்திக் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினருக்குமிடையே விரோதம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், முத்தையா கடந்தாண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, சித்திக், அவரது சகோதரா் சித்தாா்த் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிணையில் வெளியே வந்தனா். இருப்பினும், ஊருக்குள் வராமல் இருவரும் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சித்திக் தனது நண்பா்களுடன் விக்கிரமங்கலம் அருகேயுள்ள மலையூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்மக் கும்பல் சித்திக்கை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த சித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சித்திக்கின் நண்பா்கள் இருவா் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் போலீஸாா் விரைந்து சென்று, சித்திக்கின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துமனைக்கு அனுப்பினா். காயமடைந்த இருவரும் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

முத்தையா கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் சித்திக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.