பழனி பகுதியில் நெல் விலை சரிவால் விவசாயிகள் கவலை:  அரசு நெல் கொள்முதல் மையம் அமைக்க கோரிக்கை

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல்விலை மிகவும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Updated on
2 min read

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல்விலை மிகவும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
     திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் போதிய அளவு இருப்பதாலும், பழனியை சுற்றி மூன்று அணைக்கட்டுகள் இருப்பதாலும் பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரபட்டி உள்ளிட்ட பல கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.  
 கோ 45, கோ.43, சி.56, ஐ.ஆர்.20, சாவித்ரி, கல்ச்சர் பொன்னி எபல்வேறு ரகங்களிலும் பயிர் செய்யப்பட்டுள்ள இவை 120 முதல் 130 நாட்களில் அறுவடைக்கு வரும் நெல் ரகங்களாகும்.  கடந்த மழைக்காலத்தின்போது நடவு செய்யப்பட்ட இந்த நெற்பயிர்கள்  தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளன.  பல விவசாய நிலங்களில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  
  இந்நிலையில் நெல் வாங்கும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மிகவும் குறைந்த விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் நெல் வாங்குவதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.   ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட விதை நெல், நெற்பயிர் நாற்று விடுதல், நடுதல் மற்றும் களைக்கொல்லி மருந்தடித்தல், பயிர் விளைந்த பின்பு உரத்துக்கான செலவு செய்தது போக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையில் மட்டுமே லாபம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து பழைய ஆயக்குடியை சேர்ந்த முத்து என்ற விவசாயி கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில் இந்த ஆண்டு மழை பெய்ததால் நெல் பயிரிட்டோம்.  அதுவும் அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் ஏக்கருக்கு ஐந்தாயிரம் வரை இழப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் நெல்லை மிக குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்பதால் என்ன செய்வது என தெரியவில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் 150 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.2, 300 வரையே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  ஒரு ஏக்கருக்கு 13 மூட்டை கிடைக்கும் நிலையில் 120 நாள் உழைப்புக்கு ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது என தெரிவித்தார்.  கடந்த வறட்சி காலத்தின் போது வைக்கோல் மட்டுமே ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை விற்ற நிலையில் தற்போது நெல் விலையே ஏக்கருக்கு 20 ஆயிரம் தான் விற்கிறது.  
 அதிலும் கடைக்கோடி நிலங்களில் உள்ள வைக்கோல் கேட்பாரற்று உள்ளது.  இதனால் அடுத்த முறை விவசாயம் செய்யவே விவசாயிகள் யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  நெல் அறுவடை காலங்களில் அரசு கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு அரசே விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்தது.  ஆனால் இந்த முறை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஆகவே, பழனி சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நெல்கொள்முதல் மையம் அமைத்தால் குறைந்த பட்சம் விவசாயிகள் பட்ட உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com