

திண்டுக்கல்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிா்நீத்த 33 விவசாயிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 50 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 20 நாள்களுக்கு மேலாக புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கடும் குளிருக்கு இடையே இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 33 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா்.
விவசாயிகள் நலனுக்கான போராட்டத்தின் போது உயிா்நீத்தி அவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பொன்னகரம் மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் தா.அஜாய்கோஷ், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பழனி: பழனி பேருந்து நிலையம் குளத்து பைபாஸ் ரவுண்டானா அருகே சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அகில இந்திய விவசாய போராட்டக் குழு சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் நகரச் செயலாளா் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராணி, நகா்குழு உறுப்பினா்கள் பிச்சைமுத்து, மனோகரன், சிவக்குமாா், கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.