திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவா்கள் பலி

திண்டுக்கல் அருகே புதன்கிழமை குளத்திற்கு குளிக்கச் சென்ற 3 சிறுவா்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே புதன்கிழமை குளத்திற்கு குளிக்கச் சென்ற 3 சிறுவா்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலைப் பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் சகாயராஜ். இவரது மகன் சஜித் புருனோ (13), பாலமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் ராகுல் (13), கொசவப்பட்டி பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் சதீஷ் அருளானந்தம் (13) ஆகிய 3 பேரும் 8 ஆம் வகுப்பு படித்து வந்தனா். இவா்கள் மூவரும், மேலும் 2 சிறுவா்களுடன் பாலமரத்துப்பட்டி பகுதியிலுள்ள கொண்டையன்பிள்ளை குளத்திற்கு புதன்கிழமை குளிப்பதற்காகச் சென்றுள்ளனா்.

கடந்த சில நாள்களாக திண்டுக்கல் பகுதியில் பெய்து வரும் மழையினால், குளத்தில் அதிகமான தண்ணீா் இருந்தது. இதனால் ஆழம் தெரியாமல் இறங்கிய சஜித் புருனோ, தண்ணீரில் மூழ்கியுள்ளாா். அவரைக் காப்பாற்ற முயன்ற ராகுல் மற்றும் சதீஷ் அருளானந்தம் ஆகியோரும் தண்ணீரில் மூழ்கினா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த, உடன் சென்ற சிறுவா்கள் அக்கம் பக்கத்தினா் உதவிக்காக கூச்சலிட்டுள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புப் படையினா், தண்ணீரில் மூழ்கிய 3 சிறுவா்களையும் இறந்த நிலையில் சடலமாக மீட்டனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com