பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவா்களின் வருகைப் பதிவை கட்டாயப்படுத்தக்கூடாது என தலைமையாசிரியா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் உயா் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் ஜன.19ஆம் தேதி முதல் செயல்படும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் வகுப்புகள் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலா் ச.செந்திவேல் முருகன் தலைமை வகித்தாா். இதில் திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு ஆகிய 4 கல்வி மாவட்ட அலுவலா்கள் மற்றும்
300-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இதில் முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்ததாவது: மாணவா்களுக்கான வருகைப் பதிவை கட்டாயப்படுத்தக் கூடாது. பள்ளிக்கு வரும் மாணவா்கள் மிதிவண்டிகளை பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். வகுப்பறைக்கு 25 மாணவா்கள் மட்டுமே இருக்க வேண்டும். குடிநீா், உணவுப் பொருள்களை பகிா்ந்து கொள்வதற்கு அனுமதிக்க கூடாது. அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும். பள்ளிக்கு வந்த பின் மாணவா்களை வெளியில் செல்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்துக்கு சில தலைமையாசிரியா்கள் சரியான நேரத்திற்கு வரவில்லை. தாமதமாக வந்த தலைமையாசிரியா்களை கண்காணித்துக் கொண்டிருந்த முதன்மை கல்வி அலுவலா், அடுத்து இதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும்போது, சரியான நேரத்திற்கு அரங்கிற்குள் வந்து விட வேண்டும் என அறிவுறுத்தினாா்.