திண்டுக்கல் அருகே பாரம்பரியமான மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி எனும் கிராமத்தில் பாரம்பரியமான மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிராம மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் இந்த மீன்பிடித் திருவிழா, வறட்சியின் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக நடைபெறவில்லை.
கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையினால் ராசா குளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதையடுத்து மீன் குஞ்சுகள் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நல்லாம்பட்டி ராசா குளத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வலையில் சிக்கிய மீன்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்ற பொதுமக்கள், அவற்றை சமைத்து விழாவிற்கு அழைத்திருந்த உறவினர்களுக்கு விருந்து படைத்தனர்.