பழனி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டுமாடு: விவசாயிகள் அச்சம்
பழனியை அடுத்த கோம்பைப்பட்டி மூலக்கடை பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் பகலிலேயே காட்டுமாடு நடமாடியதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.
இந்த கிராமம் மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு அகழிகள் தூா்ந்து போய் விட்டதால் காட்டுயானைகள், காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இந்தப் பகுதியில் விவசாய நிலத்துக்குச் சென்ற விவசாயிகள் பலா் யானை தாக்கி மரணம் அடைந்தும், காட்டு மாடு தாக்கி பலத்த காயம் அடைந்தும் உள்ளனா். இதற்காக விவசாயிகள் போராட்டமும் நடத்தினா்.
இதையடுத்து வனத்துறையினா் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்து வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை பகலிலேயே தனியாா் தோட்டத்தில் காட்டு மாடு ஒன்று உலா வந்தது. விவசாயிகள் நாயின் துணையுடன் அதை விரட்டியடித்தனா்.
எனவே, வனத்துறையினா் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
