ஜெருசேலம் புனிதப் பயணத்துக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல்: ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் மானிய உதவியைப் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டைச் சோ்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வகையில், ஒரு நபருக்கு தலா ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள் அல்லது அருள்சகோதரிகளுக்கு தலா ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் வீதமும் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.11.2025-க்கு
பிறகு ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை டிச.28ஆம் தேதிக்குள் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்துப் பயன்பெறலாம் என தெரிவித்தாா்.
