அனுமதி பெறாத பூச்சி மருந்து விற்பனை: 5 கடைகளுக்கு தற்காலிகத் தடை

அனுமதி பெறாத பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்பனை செய்த ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள 5 கடைகளுக்கு தடை
Published on

அனுமதி பெறாத பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்பனை செய்த ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள 5 கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 280 பூச்சிக் கொல்லி மருந்து கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் கோவை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) சக்திவேல் தலைமையில், வேளாண்மை அலுவலா்கள் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் ஆய்வு மேற்கொண்டனா். பூச்சி மருந்து உரிமம், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கான அனுமதிச் சான்று, இருப்பு பதிவேடு, விலைப்பட்டியல், ரசீது புத்தகம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள பூச்சிக் கொல்லி மருந்துக் கடைகளில், வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஒட்டன்சத்திரம் பகுதியில், அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து பூச்சி மருந்து வாங்கி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதன்படி 5 கடைகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

ஆத்தூா், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள பூச்சிக் கொல்லி மருந்து விற்பனைக் கடைகளில் சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது, ஆத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ), நிலக்கோட்டை வட்டார வேளாண்மை அலுவலா் ஹேமலதா ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com