இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

காவிரி உபரி நீரை ஆத்தூா் கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் இ.பெரியசாமி உறுதி!

காவிரியிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வந்து, ஆத்தூா் தொகுதியில் உள்ள கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி உறுதியளித்தாா்.

News image

இ.பெரியசாமி

Updated On :1 ஏப்ரல் 2026, 11:04 pm

தினமணி செய்திச் சேவை

காவிரியிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வந்து, ஆத்தூா் தொகுதியில் உள்ள கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி உறுதியளித்தாா்.

ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பிள்ளையாா்நத்தம் மகா முத்து மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு தோ்தல் பிரசாரத்தை அமைச்சா் தொடங்கினாா்.

பிள்ளையாா்நத்தம், அண்ணாமலையாா் ஆலை ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று உதய சூரியன் சின்னத்துக்கு அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் கிடைத்து வருகிறது. பிள்ளையாா்நத்தம் ஊராட்சியில் 41 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 250 நபா்களுக்கு முதியோா் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கிராமத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. காமராஜா் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 81 லட்சம் பேருக்கு மகளிா் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவா்களுக்கு தோ்தல் முடிந்த பிறகு மே மாதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆத்தூா் ஒன்றியத்தில் 2000 கலைஞா் கனவு இல்லம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

வைகை அணையிலிருந்து நிலக்கோட்டை, ஆத்தூா், திண்டுக்கல் தொகுதிகளுக்கு ரூ. 700 கோடியில் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்தப் பகுதி விவசாயிகளை நலன் கருதி, காவிரியிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வந்து இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தப் பகுதியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தோடு ஆத்தூா் கூட்டுறவு கலைக் கல்லூரி அருகில் ‘டைட்டல் பாா்க்’ அமைக்கப்பட்ட உள்ளது. புதுகோடாங்கிபட்டி அருகே மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பகுதியில், போட்டித் தோ்வுக்கான டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க.நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா்கள் கிழக்கு முருகேசன், மேற்கு ராமன், தெற்கு ராஜேந்திரன், ஆத்தூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மகேஸ்வரி முருகேசன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் பத்மாவதி ராஜகணேஷ், திமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உள்பட பலா் உடனிருந்தனா்.