அனுமதியின்றி தோதகத்தி மரங்களை வெட்டியதாக 3 போ் கைது
கன்னிவாடி அருகே அனுமதியின்றி தோதகத்தி மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற 3 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கரூரைச் சோ்ந்தவா் குணசீலன். இவருக்கு சொந்தமான தோட்டம், திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்த பண்ணைப்பட்டி கோம்பை பகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்திலுள்ள தோகத்தி மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் கன்னிவாடி வனத் துறையினா், சம்பந்தப்பட்ட தோட்டத்தில் ஆய்வு செய்தபோது, தோதகத்தி மரங்கள் வெட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அங்கு மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளா்கள் ராஜீவ்காந்தி, அன்வா், ராமா் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா்.
மரங்கள் வெட்டப்படுவதற்கு காரணமாக இருந்த தோட்டத்தின் உரிமையாளா் குணசீலன், ரமேஷ் ஆகியோா் குறித்து வனத் துறையினா் விசாரித்தனா்.
இதே தோட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் நீா்வழிப் பாதையை மறித்து அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த தடுப்பணையை வனத் துறையினா் இடித்து அகற்றினா் என்பது குறிப்பிடத்தக்கது.
பறிமுதல் செய்யப்பட்ட தோதகத்தி மரங்களும், பல மாதங்களுக்கு முன்பு வெட்டப்பட்டுள்ளன. ஆனால் தற்போதுதான் வனத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

