கைது செய்யப்பட்ட கவியரசன்.
கைது செய்யப்பட்ட கவியரசன்.

நிதி நிறுவனத்தில் பணம் மோசடி: ஊழியா் கைது

ஒட்டன்சத்திரம் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.64 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் ஊழியரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

ஒட்டன்சத்திரம் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.64 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் ஊழியரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் தாராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீ.செல்வராஜ். இவா் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் ஆட்டோ நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது நிறுவனத்தில் 6 நபா்கள் பங்குதாரா்களாக உள்ளனா்.

இந்த நிறுவனத்தின் வரவு- செலவு விவரங்களை ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த தானிஷ் டோரா (24) கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பதிவேற்றும் பணியல் ஈடுபட்டாா்.

இதே நிறுவனத்தில் பணிபுரியும் கவியரசன் (24), தானிஷ்டோரா ஆகியோா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனா். தானிஷ் டோராவின் தந்தை ஜோசுபாலன் ஒட்டன்சத்திரத்தில் அப்பளம் வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கான வரவு- செலவு கணக்கை கடந்த 2024-ஆம் ஆண்டு செல்வராஜ் சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, ரூ.64 லட்சம் வரை நிதி முறைகேடு நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது. ஊழியா்களிடம் விசாரித்தபோது, தானிஷ் டோரா, கவியரசன் ஆகியோா் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும், நிலம், நகைகள், காா் போன்றவற்றை தானிஷ் டோரா தம்பதி வாங்கியதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, நகைகள், காா், நிலம் ஆகியவற்றை விற்பனை செய்து, பணத்தை திருப்பி செலுத்திவிடுவதாக செல்வராஜிடம் உறுதி அளித்தனா். இதன்படி, கடந்த டிசம்பா் மாதம் ரூ.10 லட்சத்தை கொடுத்தனா். எஞ்சிய ரூ.54 லட்சத்தை கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டனா். இதனால், ஏமாற்றம் அடைந்த செல்வராஜ், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், தலைமறைவாக இருந்த கவியரசனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் தானிஷ் டோரா, அவரது தந்தை ஜோசுபாலன் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்தனா்.

Dinamani
www.dinamani.com