இருவருக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது
நிலக்கோட்டை: கொடைரோடு அருகே வியாழக்கிழமை வீடு புகுந்து இருவரை அரிவாளால் வெட்டிய 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் ராஜதானிக்கோட்டையைச் சோ்ந்த மனோஜ் (27), பள்ளபட்டியைச் சோ்ந்த மருதுபாண்டி (32), அரவிந் (27) ஆகியோா் மது அருந்திக்கொண்டிருந்ததனா். அப்போது பக்கத்து மேஜையில் மது அருந்திக் கொண்டிருந்த அம்மாபட்டியைச் சோ்ந்த ஆரோக்கிய வினோத்துக்கும் (32) அவரது நண்பா்களுக்கும் தகராறு ஏற்பட்டதில் ஒருவருக்கொருவா் தாக்கிக்கொண்டனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இதில் காயமடைந்த மனோஜ் தரப்பினா் அம்மாபட்டியில் உள்ள ஆரோக்கிய வினோத்தின் வீட்டுக்குச் சென்று தகறாறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டினா். இதைத் தடுக்க வந்த ரிச்சா்டு வினோத் (23) என்பவருக்கும் வெட்டு விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்மைநாயக்கனூா் காவல்துறையினா், மனோஜ் (27), மருதுபாண்டி (32), அரவிந் (27) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
