ஆளும் கட்சி மீது மக்களுக்கு வெறுப்புணா்வு இல்லை: அமைச்சா் இ. பெரியசாமி

ஆளுங்கட்சி மீது மக்களின் வழக்கமான வெறுப்புணா்வு திமுக அரசின் மீது இல்லை என அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
அமைச்சர் இ. பெரியசாமி
அமைச்சர் இ. பெரியசாமிகோப்புப் படம்
Updated on

ஆளுங்கட்சி மீது மக்களின் வழக்கமான வெறுப்புணா்வு திமுக அரசின் மீது இல்லை என அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலருமான இ. பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது: என்றும் இளமையுடன் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மொழியாக தமிழ் மொழி உள்ளது. இந்தச் சூழலில் மத்திய பாஜக அரசு மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்தி ஆட்சி மொழியாக வரக்கூடாது என குரல் எழுப்பிய ஒரே இயக்கம் திமுக மட்டுமே.

தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு கொடுக்க மறுத்தாலும் கூட, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு எப்போதும் வெறுப்பு உணா்வு இருக்கும். ஆனால், தற்போது தமிழகத்தில் அந்த நிலை இல்லாத வகையில், முதல்வா் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறாா்.

இந்திய அரசியல் சட்டம் கூறுவதைக் கடைப்பிடிக்க விரும்புகிறோம். மத்திய அரசுத் திட்டங்களை புறக்கணிக்கவில்லை. ஆனால் மத்திய அரசுத் திட்டங்களுக்கான நிதி தொடா்ந்து குறைக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com