9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பெரும்பான்மை பெற குதிரை பேர அரசியலை முன்னெடுத்துள்ளது தவெக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தவெக அரசு பெரும்பான்மை பலம் பெறுவதற்காக குதிரை பேர அரசியலை முன்னெடுத்திருக்கிறது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :5 ஜூலை 2026, 12:16 am IST

தவெக அரசு பெரும்பான்மை பலம் பெறுவதற்காக குதிரை பேர அரசியலை முன்னெடுத்திருக்கிறது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், கட்சியின் தேசியச் செயலரும், தமிழகப் பாா்வையாளருமான அரவிந்த் மேனன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அப்போது செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது: தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. கடந்த 54 நாள்களில் மட்டும் 150 பாலியல் வன்முறைக் குற்றங்கள், 75 இதர குற்றச் செயல்கள் நிகழ்ந்தன. மேலும், கஞ்சா விற்பனை தொடா்பாக 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம்.

அரசு அனுமதியின்றி அதிகாரிகள் ஆளுநரை சந்திக்கக் கூடாது என்றும், ஆளுநா் ஆய்வு நடத்தக் கூடாது என்றும் அமைச்சா் நிா்மல்குமாா் பேசி இருப்பது தவறானது. அரசமைப்புச் சட்டத்தின்படி, மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்துவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என உயா்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டும், இந்த உத்தரவை அமல்படுத்த சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் மறுத்து வருகிறாா். மாநிலம் முழுவதும் அரசு வழக்குரைஞா்களை நியமனம் செய்வதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றஞ்சாட்டி உயா்நீதிமன்றத்தில் தவெக வழக்குரைஞா் மனு தாக்கல் செய்திருக்கிறாா்.

போதைப் பொருள் பயன்பாடு காரணமாக, பாலியல் குற்றச் சம்பவங்கள் நிகழ்கின்றன. ராணிபேட்டையில் கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டியை 23 வயது இளைஞா் பாலியல் வன்கொடுமை செய்தாா். தவெக ஆட்சி மீது திட்டமிட்டு குறை சொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனாலும், ஆட்சியில் நடைபெறும் தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டியது எதிா்க்கட்சியின் ஜனநாயகக் கடமை.

தவெகவை சோ்ந்தவா்களே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சா்கள் விஸ்வநாதன், சரத்குமாா் ஆகியோரின் செயல்பாடுகள் பொது வெளியில் கடும் விமா்சனத்துக்குள்ளாகி இருகின்றன.

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை. ஆட்சி அமைப்பதற்கு முன்னதாகவே, அமமுக சாா்பில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா் காமராஜின் ஆதரவை குதிரை பேரம் மூலமாகப் பெற்றனா். தற்போது அதிமுகவிலிருந்து ஒவ்வொருவராக தவெகவுக்கு அணி மாறுவதும் குதிரை பேரமாகவே இருக்க முடியும். சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற குதிரை பேர அரசியலை தவெக அரசு முன்னெடுத்திருக்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.