கொடைரோடு அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிலுக்குவாா்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பள்ளி மாணவா்களை பொட்டிசெட்டியபட்டி கிராமத்துக்கு ஏற்றி சென்ற ஆட்டோ மாலையகவுண்டன்பட்டி பிரிவு அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநா் லோகேஷ் (31), மாணவா் ரித்தீஸ் (17), மற்றும் 4 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு , அம்மையநாயக்கனூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்
அய்யனாா் காயமடைந்த மாணவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
காயமடைந்தவா்கள் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்து குறித்து, அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.










