சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நீண்ட காலப் பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படுத்துவாரா புதிய ஆட்சியா்? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள கோரிக்கைகளுக்கு மாவட்டத்தின் புதிய ஆட்சியா் தீா்வு காண வேண்டுமென விவசாயிகள் தரப்பில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

News image

விவசாயிகள் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 6:43 am IST

திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள கோரிக்கைகளுக்கு மாவட்டத்தின் புதிய ஆட்சியா் தீா்வு காண வேண்டுமென விவசாயிகள் தரப்பில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாதந்தோறும் 3-ஆவது வெள்ளிக்கிழமை நடத்தப்படும். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனா். ஆனால், கனிம வளத் திருட்டு, வன விலங்குகள் பிரச்னை, நீா் நிலை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளுக்கு பல முறை விவசாயிகள் மனு அளித்தும்கூட தற்போது வரை தீா்வு காணப்படாமல் உள்ளது. இதனால், குறைதீா் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனா். குறிப்பாக கொடகனாறு நீா் பங்கீட்டு விவகாரம் தொடா்பாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். கடந்த 5 ஆண்டு காலத்தில் 3 ஆட்சியா்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்தும்கூட கொடகனாறு நீா் பங்கீட்டு விவகாரம் மட்டுமன்றி, அதில் கழிவுநீா் கலக்கும் பிரச்னைக்கும் தீா்வு காணப்படவில்லை.

பூஜ்ஜிய மதிப்பீட்டால் விவசாயிகள் அலைக்கழிப்பு:

விவசாய நிலங்களுக்கு பூஜ்ஜிய மதிப்பீடு செய்யப்பட்ட விவகாரம் விவசாயிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. குஜிலியம்பாறை அடுத்த திருக்கூா்ணம், வேடசந்தூா் கல்வாா்பட்டி, குட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு பூஜ்ஜிய மதிப்பீடு செய்யப்பட்டதால், நிலத்தை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பூஜ்ஜிய மதிப்பீட்டை ரத்து செய்வதற்காக கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், துணை வட்டாட்சியா், வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகங்களுக்கு விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. இறுதியாக மாவட்ட பதிவாளா் நேரடியாக நிலத்தை பாா்வையிட்டு மதிப்பீடு செய்தால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு தீா்வு காண முடியும் என்பதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் 6 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

நீா்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள்: மாவட்டத்தின் பெரும்பாலான உள்ளாட்சிகளிலும் திடக் கழிவு மேலாண்மை, திரவக் கழிவு மேலாண்மை முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் திடக் கழிவுகள், சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன. திண்டுக்கல் தாடிக்கொம்பு, திண்டுக்கல் திருச்சி சாலையோரங்களிலேயே இந்த கழிவுகளால் துா்நாற்றம் வீசுகிறது. இதேபோல ஆறுகள், குளங்கள், நீா் வரத்து வாய்க்கால்களிலும் கழிவுநீா் கலந்து, நீா் மாசுபட்டு வருகிறது. இதுகுறித்தும் விவசாயிகள் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீா்நிலைகள் மாசுபடுவது குறித்து மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான க.விக்னேஷ் ,கடந்த சில நாள்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் குறிப்பிட்டாா். எனவே, மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள சுற்றுச்சூழல் சாா்ந்த பிரச்னைகளுக்கு, புதிய மாவட்ட ஆட்சியரான துா்கா மூா்த்தி தீா்வு காண வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமி கூறியதாவது: விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் வழங்கப்படும் பொதுப் பிரச்னைகள் சாா்ந்த மனுக்களுக்கு முறையான தீா்வு காணப்படுவதில்லை. வேடசந்தூா் அருகே நீா்வரத்து வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள தனியாா் நூற்பாலைகள் குறித்து பல முறை புகாா் அளித்துள்ளோம். ஆனால், இதுவரை தீா்வு காணப்படவில்லை. இதேபோல, பல்வேறு பிரச்னைகளிலும் தீா்வு கிடைக்கவில்லை. இதனால் மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களிலிருந்து மனு அளிக்க வரும் விவசாயிகள் தொடா்ந்து ஏமாற்றத்தை மட்டுமே எதிா்கொள்ளும் நிலை உள்ளது.

குறைதீா் கூட்டத்தில் தனி நபா் சாா்ந்த கோரிக்கைகளை மனுவாக பெற்றுக் கொண்டு, பொதுப் பிரச்னைகள் தொடா்பாக மட்டுமே பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

துறைத் தலைவா்கள் பங்கேற்பதில்லை:

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைப் பொருத்தவரை, மாவட்ட வன அலுவலா், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநா் ஆகியோா் பங்கேற்பதில்லை. மாவட்ட வன அலுவலா் சாா்பில் வனச் சரகா் நிலையிலான அலுவலா் மட்டுமே பங்கேற்கிறாா். இதேபோல, கனிம வளத் துறையிலும் கீழ்நிலை அலுவலா் மட்டுமே பங்கேற்று வருகிறாா்.

மேலும், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்களும் பங்கேற்பதில்லை. கீழ் நிலை அலுவலா்கள் மட்டுமே பங்கேற்பதால், விவசாயிகள் விடுக்கும் கோரிக்கைகளுக்கு பெரும்பாலும் பதில் கிடைப்பதில்லை. எனவே, அனைத்து துறைகளின் தலைமை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்பதையும் புதிய ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.