/

கொடைக்கானல் கிராமப் பகுதி சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் கிராமப் பகுதிகளில் வயல் வெளிச் சாலைகளை சீரமைப்பதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் பகுதியில் சாலை அமைக்கப்படாததால் குதிரை மூலம் எடுத்துச் செல்லப்படும் பொருள்கள்.

Updated On :26 மார்ச் 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் கிராமப் பகுதிகளில் வயல் வெளிச் சாலைகளை சீரமைப்பதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, கூக்கால், பூண்டி, குண்டுபட்டி, கவுஞ்சி, கும்பூா், பழம்புத்தூா், புதுப்புத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் பூண்டு, கேரட், நூக்கல், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்த விவசாய நிலங்களுக்குச் செல்லும் கிராமச் சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மண் சாலைகளாகவே இருந்து வருகின்றன. இதனால், விவசாயத்துக்கு தேவையான இடுபொருள்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே விவசாய நிலப் பகுதிகளில் உள்ள மண் சாலையை சீரமைத்து தரமான சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

இது குறித்து கொடைக்கானல் மேல்மலைக் கிராம மக்கள் கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குச் செல்லும் வயல்வெளிப் பகுதிகளில் மண் சாலை இருந்து வருகிறது. இந்தச் சாலையை சிமென்ட் சாலையாக மாற்றிக் கொடுக்க வேண்டுமென பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தோம். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயப் பொருள்களையும், விளைந்த காய்கறிகளையும் தலைச்சுமையாகவும், குதிரை மூலமாகவும் எடுத்துச் செல்கிறோம். சாலை அமைத்துக் கொடுத்தால்தான் விவசாயப் பணிகளை விரைவாகச் செய்ய முடியும். மேலும், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலுள்ள சாலைகள் சிமென்ட் சாலையாக மாற்றப்படாமல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனவே, கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சாலைகளை சீரமைப்பதற்கு கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.