கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக 21-வது பட்டமளிப்பு விழா வரும் 10-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ரோசய்யா மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, மதுரையில் செய்தியாளர்களிடம் தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கா. மணிமேகலை கூறியது:
பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம். கிராமப்புற மகளிர் மேம்பாட்டுக்காக மேலாண்மைக் கல்வி மற்றும் தொழில்நுட்ப பூங்கா கணினி பயிற்சி மையம், மத்திய அரசின் உதவியுடன் விரைவில் அமைக்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தின் இரு பட்டமளிப்பு விழாக்கள், மதுரையில் ஜன. 10-ம் தேதி ராஜாமுத்தையா மன்றத்தில் நடத்தப்படுகிறது. மாணவியர், பெற்றோரின் வசதிக்கு ஏற்பவே மதுரையில் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநரரும், பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யா தலைமை வகிக்கிறார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான பி.பழனியப்பன் வாழ்த்துரை வழங்குகிறார்.
மாநில உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் சிந்தியாபாண்டியன் பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார்.
இதில் ஆய்வுக்காக 230 பேரும், முதுநிலை ஆய்வுப் படிப்பில் (எம்.பில்) 337 பேரும், முதுநிலை பட்டப்படிப்பில் 1294 பேரும், முதுகலை ஆசிரியர் பயிற்சியில் 68 பேரும், இளநிலை ஆசிரியர் பயிற்சியில் (பி.எட்) 197 பேரும், இளநிலை பட்டப்படிப்பில் 6459 பேரும், முதுநிலை டிப்ளமாவில் 3126 பேரும் என மொத்தம் 11,715 பேர் பட்டம் பெறுகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் 18 பாடப்பிரிவுகள் உள்ளன. மாணவியரின் எண்ணிக்கையை கூடுதலாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
மகளிர் பல்கலைக்கழகம் என்பதால் ஆய்வுப் படிப்புக்கு பயமின்றி ஏராளமான மகளிர் வருகை தருகின்றனர். ஆய்வுப்படிப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பேட்டியின்போது, பல்கலைக்கழக பதிவாளர் என். கலா, மதுரை சமூக அறிவியல் கல்லூரித் தலைவர் டி.வி.பி. ராஜா, முதல்வர் பேராசிரியர் எம். கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.