அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, இரவு நேரங்களில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும், என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சங்கத்தின் தலைவர் என். ஜெகதீசன் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் திருத்தி அமைக்கப்பட்ட ஆணையின்படி, தாழ்வழுத்த மின் இணைப்புக்கு மாதந்தோறும் ரூ. 30 என நிரந்தரக் கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது, மின் இணைப்பின் அடிப்படையில் நிரந்தரக் கட்டணம் கணக்கிடப்படாமல், மின் இணைப்புக்கு பெற்றுள்ள கிலோவாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், கட்டணம் சுமார் 100 மடங்கு உயர்த்தப்பட்டு, செலுத்தும் நிலை இருக்கிறது.
இவ்வாறு நிரந்தரக் கட்டணம் மிக அதிகமான அளவில் உயர்த்தப்பட்டு, மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மின்கட்டணம் மற்றும் உற்பத்திச் செலவு உயர்வு, வட்டி விகித அதிகரிப்பு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால், வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் சிரமங்களை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.
பெரும்பாலான சிறு தொழில்கள் உற்பத்தியை முற்றிலும் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள சிறு தொழில்களுக்கும், வணிக உபயோக மின்இணைப்பு பெற்றுள்ள நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள இக்கடுமையான பாதிப்பை கருத்தில்கொண்டு, மின்சார உபயோகத்துக்கான நிரந்தரக் கட்டணத்தை மீண்டும் மாதம் ஒன்றுக்கு ரூ. 30 என மாற்றி அமைக்கவேண்டும் அல்லது மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் வரை, மிக அபரிதமாக உயர்த்தப்பட்டுள்ள நிரந்தரக் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும்.
கிடைக்கும் மின்சாரத்தை தமிழகம் முழுவதும் பாகுபாடின்றி சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழிகாட்டியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தற்போது, சென்னையில் 2 மணி நேர மின்வெட்டும், பிற மாவட்டங்களில் 16 மணி நேர மின்தடையும் உள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மின் விநியோகத்தை சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் தினசரி ஒரு ஷிப்டாவது நடத்தக்கூடிய வகையில், குறைந்தபட்சம் பகலில் 8 மணி நேரம் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும்.
பொதுமக்கள், மாணவ, மாணவியர், குறிப்பாக மகளிர், சிறு குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் நலனைக் கருத்தில்கொண்டு, இரவு நேரங்களில் தடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் பந்துவீச்சு: ஆஸி. அணியில் அறிமுகமான யு19 வீரர் ஆலிவர் பீக்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!

மணிப்பூர் புதிய டிஜிபி ஜூன் 1இல் பொறுப்பேற்பு

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


