கொட்டாம்பட்டி அருகே கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்சி: போலீஸார் ரோந்து வந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின

கொட்டாம்பட்டி அருகே உள்ள கச்சிராயன்பட்டி வேளாண் தொடக்கக் கூட்டுறவு வங்கி ஜன்னலை உடைத்து, நகைகளை மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர்.
Updated on
1 min read

கொட்டாம்பட்டி அருகே உள்ள கச்சிராயன்பட்டி வேளாண் தொடக்கக் கூட்டுறவு வங்கி ஜன்னலை உடைத்து, நகைகளை மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர்.
      கச்சிராயன்பட்டி வேளாண் தொடக்கக் கூட்டுறவு வங்கி, மேலூர்-திருச்சி நான்குவழிச் சாலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவில், மர்ம நபர்கள் இக் கட்டடத்தின் பின்புற ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், கேஸ் வெல்டிங் வைத்து வங்கி லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர்.
     அப்பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து செல்லும் போலீஸார், வங்கிக் கட்டடத்தை கண்காணிப்பது வழக்கமாம். வங்கி லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மர்ம நபர்கள், போலீஸார் ரோந்து வந்ததால் தப்பியோடிவிட்டனராம். இதனால், வங்கி லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அடமானம் பெறப்பட்ட நகைகள் தப்பின.
     தகவலறிந்து சம்பவ இடத்தை, மதுரை புறநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பார்வையிட்டார். தடயவியல் நிபுணர் காஜாமைதீன் கைரேகைகளை பதிவு செய்தார். காவல் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.
இது குறித்து வங்கிச் செயலர் கணேசன் அளித்த புகாரின்பேரில், கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     இதே வங்கியில், சில மாதங்களுக்கு முன்னரும் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனாலும், வங்கியில் இன்னும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com