இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி தமிழ்ப்புலிகள் அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
தனியார், மெட்ரிக். பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இலவச சேர்க்கை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பெற்றோருக்கு சரியான தகவல்களை பள்ளி நிர்வாகங்கள் அளிப்பதில்லை. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி மே 29-ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் பலரது விண்ணப்பங்களைச் சேர்க்காமலேயே நடத்தியுள்ளனர். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலருக்குப் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சியின் மதுரை மாநகர துணைச் செயலர் அ.செவ்வயல் சந்துரு தலைமையில் கரும்பாலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், இதுதொடர்பாக குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.