மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரும்படி முகவர்களாக செயல்பட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள், மாநகர காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
மதுரை மேலமாசி வீதியில் கடந்த 2010-இல் ஒரு தனியார் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏராளமானோர் அதில் முதலீடு செய்தனர்.
அதன்படி இந்நிறுவனத்தில் ரூ.40 கோடி வரை முதலீடு வசூலிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதிர்வடைந்த முதலீடுகளுக்கு உரிய பணம் திரும்பத்தரப்படவில்லையாம். வாடிக்கையாளர்கள் நெருக்கடி அளித்ததை தொடர்ந்து நிதி நிறுவனம் மூடப்பட்டது. இதுதொடர்பாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன உரிமையாளர்கள் முருகன், மகேஸ்வரியை கைது செய்தனர்.
இந்நிலையில் நிதி நிறுவனத்தில் முகவர்களாக செயல்பட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் திங்கள்கிழமை புகார் அளித்தனர். அதில், பொதுமக்களிடம் இருந்து ரூ.40 கோடி வரை பணத்தை வசூலித்து நிதி நிறுவனத்தில் நாங்கள் செலுத்தினோம். தற்போது, வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை கேட்டு மிரட்டுகிறார்கள்.
இதனால் நாங்கள் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிதி நிறுவனம் நடத்தியவர்களின் சொத்துகளை கைப்பற்றி, வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கை விசாரித்து வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஆகிறது.
எனவே காவல் ஆணையர் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த மனுவை சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. அலுவலகத்தில் அளிக்குமாறு மாநகர காவல் ஆணையர் ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தார்.