/

திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா: நவ.8 இல் காப்புக் கட்டுதலுடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நவ.8 ஆம் தேதி கந்தசஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது.

Updated On :22 அக்டோபர் 2018, 3:10 am

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நவ.8 ஆம் தேதி கந்தசஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது.
 ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 7 நாட்கள் கொண்டாடப்படும். கந்தசஷ்டி விழாவானது இந்த ஆண்டு நவ.8 ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி காலை அனுக்கை பூஜை, துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று,  உற்சவர் சுப்பிர மணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான், வள்ளி,தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். 
இதனையடுத்து காலை 9 மணிக்கு கோயில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். 
காப்புகட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவர். காப்புக் கட்டிய பக்தர்கள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர். விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். 
தினமும் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல்வாங்கும் நிகழ்ச்சி வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் 13 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹாரம் நடைபெறும். விழாவின் 7 ம் நாள் நிகழ்ச்சியாக  14 ஆம் தேதி காலையில் சிறிய சட்டத் தேரோட்டமும், மாலை 3 மணியளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.