மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒரு லட்சம் டன் கரும்பு அரைவை செய்து, 95 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்தார்.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு பருவத்துக்கான கரும்பு அரைவை பணியை ஆட்சியர் ச.நடராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். சர்க்கரை ஆலை தலைவர் ரவிச்சந்திரன், தொழிலாளர் நல அலுவலர் க.சக்கரபாணி, கரும்பு அபிவிருத்தி அலுவலர் கோவிந்தசாமி, சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் கரும்பு அரைவை தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆட்சியர் ச.நடராஜன் கூறியது: அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் 2017-18 அரைவைப் பருவத்தில் 38 ஆயிரம் டன்கள் வரை கரும்பு அரைவை செய்யப்பட்டு 34 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பு பருவத்துக்கு 2 ஆயிரத்து 100 ஏக்கர் அளவுக்கு கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட கரும்பு 60 ஆயிரம் டன் மற்றும் பதிவு செய்யப்படாமல் உள்ள கரும்பு 10 ஆயிரன் டன் அரைவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர பெரம்பலூர், தஞ்சாவூர் சர்க்கரை ஆலைகளில் இருந்து 30 ஆயிரம் டன் என மொத்தம் ஒரு லட்சம் டன் கரும்பு அரைவை செய்து, 95 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த அரைவைப் பருவத்தில் உற்பத்தியை 2.75 லட்சம் குவிண்டால் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தியைப் பெருக்க கரும்பு விவசாயிகளுக்குப் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிக மகசூல் பெறுவதற்கான உயர் ரக கரும்பு நாற்றுகள் வழங்கப்படுகிறது.
நடப்பு அரைவைப் பருவத்துக்கு வரும் கரும்புக்கு அரசு அறிவித்துள்ள விலையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு ஏற்றி வரும் வாகனங்களுக்கு உரிய வாடகை தொகையை ஆலையே ஏற்றுக்கொண்டு வருகிறது. கரும்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில் வெட்டு உத்தரவு வழங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








