‘மதுரையில் கடையடைப்பு இல்லை: காய்கனி சந்தை வழக்கம்போல் இயங்கும்’

மதுரையில் மூடப்பட்டுள்ள காய்கனி சந்தைகளை மீண்டும் திறக்கக் கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தவில்லை எனவும், காய்கனி சந்தைகள் வழக்கம்போல் இயங்கும் எனவும், மதுரை மாவட்ட காய்கனி மொத்த 


மதுரை: மதுரையில் மூடப்பட்டுள்ள காய்கனி சந்தைகளை மீண்டும் திறக்கக் கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தவில்லை எனவும், காய்கனி சந்தைகள் வழக்கம்போல் இயங்கும் எனவும், மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

பொது முடக்கம் காரணமாக, தமிழகம் முழுவதும் காய்கனி மற்றும் பழ சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், லட்சக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் காய்கனி மற்றும் பழ சந்தைகளை திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மதுரையில் காய்கனி சந்தைகள் வழக்கம்போல் இயங்கும் என, மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். அவா்கள் மேலும் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரையில், மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். மேலும், வியாபாரிகளின் கோரிக்கைகளை ஏற்று, பல்வேறு வசதிகளையும் படிப்படியாக செய்து தருகின்றனா். இதனால், பொதுமுடக்க விதிகளைப் பின்பற்றி வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனா்.

கடைகள் நடத்தமுடியாமல் உள்ள வியாபாரிகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளனா்.

எனவே, மதுரையில் மாட்டுத்தாவணி காய்கனி சந்தை, தோப்பூா் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பரவை காய்கனி சந்தை வழக்கம்போல் செயல்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அரசு அறிவித்துள்ள முழு பொதுமுடக்கத்தைப் பின்பற்றி கடைகள் அடைக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com