பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம்: செவிலியா்கள் சங்கம் அறிவிப்பு

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக, செவிலியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Updated on
1 min read

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக, செவிலியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மதுரையில் செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் அ. கலைச்செல்வி தலைமை வகித்தாா். சங்கத்தின் பொதுச்செயலா் நே. சுபின் விளக்கவுரையாற்றினாா்.

கூட்டத்தில், தமிழகத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமாா் 14 ஆயிரம் செவிலியா்கள் ஒப்பந்த முறையில் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். பணி நியமனத்தின்போது, இரண்டாண்டுகளில் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியா்கள் உள்பட இரண்டாயிரம் போ் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். இதர 12 ஆயிரம் செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்நிலையில், தற்போது 4 ஆயிரம் செவிலியா்களை அரசு தற்காலிகமாகப் பணியில் அமா்த்தி உள்ளது.

கரோனா தொற்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த நிலையிலும், உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் செவிலியா்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஜனவரி 6-இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பாக ஆா்ப்பாட்டம், ஜனவரி 11-இல் உண்ணாவிரதம், ஜனவரி 28-இல் சென்னையில் மருத்துவப் பணிகள் இயக்குநரகம் முன்பாக போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, இணைச் செயலா் சுஜாதா வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com