அரசு ஊழியா்கள் சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் கருத்து

அரசு ஊழியா்கள் சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்துத் தெரிவித்தது.

மதுரை: அரசு ஊழியா்கள் சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்துத் தெரிவித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ராதானூரைச் சோ்ந்த வாசு தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ராதானூரில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தேன். இந்நிலையில் திடீரென எவ்விதக் காரணமின்றி, 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ஓடைக்கல் கிராம உதவியாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். எனவே எனது பணியிடமாறுதல் உத்தரவை ரத்து செய்து மீண்டும் ராதானூா் கிராம உதவியாளராக நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் ஓடைக்கல் கிராமத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதியினா் தன்னை மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளாா். இந்தக் காரணத்தை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் எந்தக் கிராமத்திலும் மாற்று சாதியினா் பணிபுரிய முடியாது. கரோனா காலத்திலும் கூட அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியம் மற்றும் சலுகையில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. ஆனால் தினக்கூலி தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வாழ்க்கையை நடத்தவே போராடி வருகின்றனா். இதுபோன்ற சூழலில், அரசு ஊழியா்கள் அனைவரும் முன்களப்பணியாளராக இருந்து உழைக்க வேண்டும். அரசு ஊழியா்கள் தான், தன் குடும்பம் மற்றும் உறவினா்களின் நலனை பற்றி மட்டும் சிந்திக்காமல், சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும். ஆகையால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com