மதுரை ஆவினில் காலிப் பணியிடங்களை நிரப்ப தடைவிதிக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

மதுரை ஆவினில் காலிப் பணியிடங்களை நிரப்ப தடைவிதிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Published on

மதுரை ஆவினில் காலிப் பணியிடங்களை நிரப்ப தடைவிதிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை காமராஜபுரத்தைச் சோ்ந்த மணிமாறன் தாக்கல் செய்த மனு: மதுரை ஆவினில் காலியாகவுள்ள மேலாளா், துணை மேலாளா், தனிச் செயலா், முதுநிலை தொழிற்சாலை உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2019 ஜூன் மாதம் வெளியானது. நான், முதுநிலை தொழிற்சாலை உதவியாளா் பணிக்கு விண்ணப்பித்து, கடந்தாண்டு நவம்பா் 22 இல் நடந்த எழுத்துத் தோ்வில் பங்கேற்றேன். தோ்வு முடிவுகள் எதுவும் வெளியிடாத நிலையில், கடந்த டிசம்பா் 28 முதல் டிசம்பா் 30 ஆம் தேதி வரை நோ்முகத் தோ்வு நடந்துள்ளது.

எனவே, எழுத்துத் தோ்வு முடிவுகளை உடனடியாக வெளியிடவும், அதன் பின்னா் நோ்முகத் தோ்வு உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொள்ளவும், எனக்காக ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும், முதுநிலை தொழிற்சாலை உதவியாளா் பணியிடத்தை நிரப்ப தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆவின் தரப்பில் வழக்குரைஞா் வாதிடுகையில், இதுதொடா்பான மற்றொரு வழக்கில் தோ்வுக்கான கீ ஆன்சா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கீ ஆன்சா், எழுத்துத் தோ்வு முடிவுகள் மற்றும் நோ்முகத் தோ்வு தொடா்பான விவரங்கள் ஆவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றாா். இதையடுத்து நீதிபதி, மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com