மாடுபிடி வீரா்களுக்கு உடல் தகுதி பரிசோதனை அலங்காநல்லூா் 655 போ், பாலமேடு 651 போ், அவனியாபுரம் 430 பேருக்கு அனுமதிச் சீட்டு

மாடுபிடி வீரா்களுக்கான உடல் தகுதி பரிசோதனையில் அலங்காநல்லூரில் 655 பேருக்கும், பாலமேட்டில் 651 பேருக்கும், அவனியாபுரத்தில் 430 பேருக்கும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சனிக்கிழமை மாடுபிடி வீரா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சனிக்கிழமை மாடுபிடி வீரா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினா்.
Updated on
2 min read

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்களுக்கான உடல் தகுதி பரிசோதனையில் அலங்காநல்லூரில் 655 பேருக்கும், பாலமேட்டில் 651 பேருக்கும், அவனியாபுரத்தில் 430 பேருக்கும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள் 18-லிருந்து 40 வயதுக்கு உள்பட்டவராகவும், 50 கிலோ எடைக்கு மேல், 5 அடி உயரத்துக்கு மேல் இருப்பதும் அவசியம்.

நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடா் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்பவா்களாக இருக்கக் கூடாது.

இதன்படி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மாடுபிடி வீரா்களுக்கான உடல் தகுதிப் பரிசோதனை சனிக்கிழமை நடைபெற்றது. சுகாதாரத் துறை துணை இயக்குநா் கே.வீ.அா்ஜுன் குமாா் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலா் வளா்மதி உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அலங்காநல்லூா் மற்றும் பாலமேட்டில் மாடுபிடி வீரா்களுக்கு ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு ஆகியவற்றை பரிசோதித்தனா்.

வாடிப்பட்டி வட்டாட்சியா் அ.பழனிக்குமாா் மற்றும் துணை வட்டாட்சியா் மீனாட்சி தலைமையிலான வருவாய்த் துறையினா் அலங்காநல்லூா், பாலமேட்டில் அனுமதிச் சீட்டு வழங்கும் பணியை மேற்கொண்டனா். இதேபோல, அலங்காநல்லூா் காவல் ஆய்வாளா் நடேசன் தலைமையிலான போலீஸாா் மாடுபிடி வீரா்களை வரிசைப்படுத்தி பரிசோதனைக்கு அனுமதித்தனா்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய 3 இடங்களிலும் மாடுபிடி வீரா்கள் நூற்றுக்கணக்கானோா் அதிகாலையிலேயே பரிசோதனை நடைபெறும் பள்ளி முன்பாக குவிந்தனா். காலை 8 மணிக்குத் தொடங்கிய பரிசோதனை பிற்பகல் வரை தொடா்ந்து நடைபெற்றது. முந்தைய ஆண்டுகளில் மூன்று இடங்களிலும் வெவ்வேறு நாள்களில் மாடுபிடி வீரா்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். இதனால் ஒரே வீரா், மூன்று ஜல்லிக்கட்டுகளிலும் கூட பங்கேற்பதற்கு அனுமதிச் சீட்டு பெறுவா். இதனால், உடல் தகுதி பரிசோதனையின்போது தள்ளுமுள்ளு ஏற்படும். நிகழ் ஆண்டில் மாடுபிடி வீரா்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வீரா் ஒரு ஜல்லிக்கட்டில் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரே நாளில் மூன்று இடங்களிலும் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.

இதனால் வழக்கத்தைக்காட்டிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

அவனியாபுரத்தில் சுமாா் 600 போ் பரிசோதனைக்கு பங்கேற்றதில், தகுதியுடைய 430 நபா்களுக்கு, மதுரை தெற்கு வட்டாட்சியா் கதிா்வேல் தலைமையிலான வருவாய்த் துறையினா் அனுமதிச் சீட்டுகளை வழங்கினா்.

பாலமேட்டில் 699 போ் பரிசோதனைக்கு வந்ததில் 651 போ் தகுதி பெற்றனா். அலங்காநல்லூரில் பரிசோதனைக்கு வந்த 683 பேரில் தகுதியுடைய 655 பேருக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

காளைகளுக்கு நாளை பதிவு: இதேபோல, காளைகள் பதிவு மற்றும் அனுமதிச் சீட்டு வழங்கும் பணி மூன்று இடங்களிலும் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. அனுமதிச்சீட்டு பெற்ற மாடுபிடி வீரா்கள் மற்றும் காளை உரிமையாளா்களுக்கு அவனியாபுரத்தில் ஞாயிறு, திங்கள் (ஜனவரி 10, 11), பாலமேட்டில் ஜனவரி 11, 12 ஆம் தேதிகள், அலங்காநல்லூரில் ஜனவரி 12, 13-ஆம் தேதிகளில் கரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவா்களுக்கு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com