பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அடை மழை காரணமாக மதுரையில் கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது பொங்கலிடும் பானையில் மஞ்சள் கொத்து கட்டுவது வழக்கம். அதேபோல, அனைவரது வீட்டிலும் பொங்கல் படைக்கும்போது கரும்பு பிரதானமாக இடம்பெறும்.
பொங்கல் பண்டிகைக்கு இரு நாள்கள் முன்பிருந்தே கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். நிகழ் ஆண்டில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வழக்கத்தைக் காட்டிலும் பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது.
மதுரையில் யானைக்கல் பகுதியில் அதிகளவில் கரும்பு விற்பனை செய்யப்படும். இதேபோல, நகரின் பல பகுதிகளிலும் கரும்பு விவசாயிகள் நேரடியாகவும், வியாபாரிகளும் கரும்பு விற்பனை செய்வா். இந்த ஆண்டு விற்பனையாளா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
மதுரையில் 10 கட்டுகள் கொண்ட கரும்பு தரத்துக்கு ஏற்ப ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, மஞ்சள் கொத்து ஒன்று ரூ.20-இல் இருந்து ரூ.30 வரை விற்பனை ஆனது. ஆனால், மழை காரணமாக குறைந்த அளவு பொதுமக்கள் தான் கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை வாங்கிச் சென்றனா். முந்தைய ஆண்டைக் காட்டிலும், நிகழ் ஆண்டில் விற்பனை மந்தமாக இருக்கிறது. பொங்கலுக்கு ஒரு நாள் மட்டுமே இருப்பதால் புதன்கிழமை விற்பனையை நம்பியே இருக்கிறோம். மழை பெய்தால், ஒரு நாள் வியாபாரமும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றனா்.